தேசிய கீதத்தை கோட்டாட்சியர் அவமதித்ததாக சக அலுவலர்கள் குற்றச்சாட்டு - Fellow Govt officials accused Natrampalli DRO
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (மே.10) நடைபெற்றது. இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் குத்துவிளக்கு ஏற்றி விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் அரசின் அனைத்து திட்டங்களை பற்றி தெரிந்து அனைத்திலும் பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளை நாடாமல் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தாலும் மருத்துவர் ஆகலாம் எனவும் தெரிவித்தார். இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 254 பயனாளிகளுக்கு 13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த மனுநீதி நாள் முகாம் முடிவுற்றபோது, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நாட்றம்பள்ளி கோட்டாட்சியர் லட்சுமி, தேசீய கீதத்தை பாடாமல் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட, சக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரியே தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டினர்.