World Cancer Day: 2000 மாணவிகள் "CAUTION" எனும் எழுத்து வடிவில் நின்று உலக சாதனை!
சென்னை: உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகப் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் ஆவடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் 7 ஆயிரம் சதுர அடியில் சுமார் 2000 மாணவிகள் "CAUTION" எனும் மனித எழுத்து வடிவிலும், அதன் லோகோ வடிவிலும் நின்று உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
இந்த சாதனையை ஐன்ஸ்டீன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பானது அங்கீகரித்து கல்லூரி முதல்வர் குமுதினியிடம் சான்றிதழ் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பெண்களுக்குப் புற்றுநோயின் ஆரம்பக் கால அறிகுறிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயானது குணப்படுத்தக் கூடிய நோய் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.