தருமபுரியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: ஆட்சியர் சாந்தி நேரில் மரியாதை! - todays news in tamil
Published : Nov 27, 2023, 1:25 PM IST
தருமபுரி: காரிமங்கலம் அடுத்த எர்ரசீகலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் கவியரசு (24). இவர் கடந்த 24ஆம் தேதி அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த கவியரசை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவியரசு நேற்று (நவ.26) மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், கவியரசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தார் முடிவு செய்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
அதன்படி மருத்துவர்கள் நேற்று அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெற்றனர். தானமாக பெறப்பட்ட உறுப்புக்கள் சென்னை, கோவை மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மூளைச் சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவியரசின் உடலுக்கு இன்று (நவ.27) காலை தருமபுரி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி, மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் மரியாதை செலுத்தினர். பின்பு அவரது உடல் சொந்த கிராமத்திற்கு இறுதி சடங்கிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.