Published : Nov 24, 2023, 8:10 AM IST
மதுரவாயல் அருகே கொட்டும் மழையில் பற்றி எரிந்த பைக்!
சென்னை:மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நேற்று காலை கோயம்பேடு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து எதிர்பாராத விதமாக திடீரென புகை எழுந்துள்ளது. புகை வெளியேறுவதைக் கண்டு அச்சமடைந்த வாகனத்தை இயக்கிச் சென்ற நபர், வாகனத்தை அப்படியே சாலையில் போட்டு விட்டு தள்ளிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, ஒரு சில நிமிடங்களிலேயே பைக் முழுவதும் தீ வேகமாகப் பரவி, வாகனம் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால், அந்த சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், போக்குவரத்து காவல்துறையினர் சென்று தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து, போக்குவரத்தையும் சீர் செய்துள்ளனர்.
தொடர்ந்து, தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், இருசக்கர வாகனம் எலும்புக் கூடாக மாறி உள்ளது. இவ்வாறு பற்றி எரிந்த வாகனம் 'பஜாஜ் பல்சர் 200' என கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தற்கான காரணத்தை விசாரிக்கையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த நபர், அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி வந்துள்ளார். இதனால், பெட்ரோல் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.