திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா - அம்மன் வீதி உலா - trichy temple
திருச்சி:பாமர மக்களால் பிரதான கடவுளாக வணங்கப்படும் கடவுள், மாரியம்மன். தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களோடு ஒப்பிடுகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பிரசித்திபெற்ற புனித தலமாக விளங்குகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
“மாரியல்லாது காரியம் இல்லை”, என்பது பழமொழி, அதாவது மழை முறையாக பெய்யவில்லை என்றால், இந்த மண்ணில் எந்த உயிர்களும் இன்புற்று வாழ முடியாது என்பதே இதன் கருப்பொருள். அத்தகைய மழைக் கடவுளாக விளங்கும் மாரியம்மனுக்கு உலகின் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் இருந்தாலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்ற ஆலயங்களை விட மிகவும் சிறப்புவாய்ந்தது.
இதனையடுத்து சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உற்சவ மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியம் உள்ளிட்டப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தினசரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அதில் பம்பை மேளதாளம் முழங்க அம்மன் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.