குஷ்புவுக்கு திருச்சி.. ரஜினிக்கு மதுரை.. கோயில் கட்டி வழிபடும் ரசிகர்! - temple for actor rajinikanth in madurai
Published : Oct 26, 2023, 10:45 PM IST
மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், அவ்வீட்டின் ஒரு பகுதியில் ரஜினிக்கு 3 அடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் செய்யப்பட்ட ரஜினி சிலையை வைத்து கோயில் ஒன்றை அமைத்து வழிபட்டு வருவது பெரிதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி அந்த அறையில் ரஜினியின் பல்வேறு தோற்றங்களைக் கொண்ட திரைப்படக் காட்சிகளை ஒட்டி வைத்து, நாள்தோறும் தீபாராதனை காட்டி கடந்த ஓராண்டாக வழிபாடு செய்து வருகிறார். தனது வீட்டிற்குள்ளே அமைத்துள்ள இந்தக் கோயிலுக்கு வேதங்கள் ஓதும் பிராமணர்களைக் கொண்டு யாகம் வளர்த்து, கும்பாபிஷேகமெல்லாம் செய்துள்ளார்.
கும்பாபிஷேகம் முடிந்ததும் அச்சிலைக்குக் கடந்த ஓராண்டாக நாள்தோறும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை செய்துள்ளார். ரஜினி ரசிகர் கார்த்திக்குக்கு அவரது பெற்றோர்களும், மனைவியும் உறுதுணையாக இருந்து தினசரி பூஜைக்கு உதவி செய்து வருகின்றனர்.
திருச்சியில் நடிகை குஷ்புவுக்குச் சிலை வைத்து கோயில் கட்டி அவரது ரசிகர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடிய நிலையில், தற்போது நடிகர் ரஜினிக்கும் கருங்கல்லால் ஆன சிலையை அமைத்து வீட்டிற்குள்ளேயே கோவில் கட்டி அவரது ரசிகர் ஒருவர் வழிபடுவது பொது மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.