எனது பிரச்னைகளை அனுபவமாகப் பார்க்கிறேன் - நடிகர் விமல் பேட்டி! - tamil cinema news
நடிகர் விமல் நடித்த 'தெய்வமச்சான்' படத்தின் பத்திரிகையாளர் காட்சி இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல் கூறியதாவது, ''விலங்கு இணையத்தொடருக்கு பிறகு கதை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தெய்வமச்சான் படம், காமெடியுடன் கன்டன்ட் உள்ள படம் என்பதால் நடிக்க முடிந்தது.
ம.பொ.சி என்ற ஒரு படம் நடித்து வருகிறேன். அது சீரியஸான கதையுள்ள படம். இப்படத்தின் ஆடியோ விழாவில் நான் படத்தின் புரோமோஷனுக்கு வருவதில்லை என்று இயக்குநர் அமீர் பேசினார். அவரைத் தொடர்பு கொண்டு எனது விளக்கத்தைக் கூறிவிட்டேன். இதே படத்தின் வேறு பிரஸ் மீட்டில் இருந்ததால் என்னால் வரமுடியவில்லை. இந்த விஷயத்தை தயாரிப்பாளர், இயக்குநரிடமும் தெரிவித்துவிட்டேன்.
ஆனால், அது அமீரிடம் யாரும் சொல்லவில்லை. தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தவறுதான். தெய்வமச்சான் படம் குறும்படமாக பார்த்தபோதே சிரிப்பு வந்தது. அதனால், படமாக எடுத்துள்ளோம். எனது பிரச்னைகளை நான் அனுபவமாகப் பார்க்கிறேன். இதனை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு, செயல்பட எனக்கு உதவியாக இருக்கும். மேலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறேன். விலங்கு இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. அது முதல் பாகத்தை விட சூப்பராக இருக்கும்’’ என்றார்.
நீங்கள் நடிக்கும் படத்தின் புரோமோஷனுக்காக லட்ச ரூபாய் பணம் கேட்பதாகத் தயாரிப்பாளர்கள் புகார் கூறுவது உண்மையா என பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்விக்கு, ''அப்படி கேட்டால் லட்ச ரூபாயை விட அதிகமாக கேட்பேன்'' என விமல் நகைச்சுவையாகப் பதில் கூறினார்.
இதையும் படிங்க: அயோத்தி திரைப்படம் போல தெலுங்கில் எடுக்க முடியுமா? சவால் விட்ட சமுத்திரக்கனி!