ஓய்வு பெற்ற காவலரின் ஒப்பற்ற சேவை! - Chandigarh State
சண்டிகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரான ஷியாம் லால் கடந்த 25 ஆண்டுகளாக சாதி, மத பாகுபாடில்லாமல் ஆதரவற்றோரின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறார். தன் மனைவியின் இறப்பினால் ஏற்பட்ட தாக்கத்தால் அடிக்கடி சுடுகாட்டுக்குச் சென்று அமர்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், அப்போது ஆதரவற்றோரின் உடல்கள் இறுதிச்சடங்கு செய்யப்படாமல் கீழே கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தியிருக்கிறார். தான் பிறந்த இந்த வாழ்வுக்கு ஓர் அர்த்தம் தேடிக் கொண்டிருந்த ஷியாம் லால், இவ்வாறு கைவிடப்படும் ஆதரவற்றோரின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடிவு செய்தார். அன்றிலிருந்து இன்று வரை சண்டிகர், மனிமஜ்ரா, பஞ்ச்குலா, பானிபெட், பாடியாலா, மொஹாலி, சிரக்பூர், ஷிம்லா ஆகிய பகுதிகளில் இறந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோரின் உடல்களுக்கு ஷியாம் லால் நல்லடக்கம் செய்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஆதரவற்றோரின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் ஷியாம் லாலை பலரும் பாராட்டி வருகின்றனர்.