சென்னை:விடிஞ்சா வெயில் வாட்டி வதைக்குது, பொழுதானா போதும் குளிர் நடுங்க வைக்குது, இதுக்கு இடையிலா சம்மந்தமே இல்லாம அப்பப்ப மழை வேற பெய்யுது.. என்ன காலநிலையோ ஒன்னும் புரியல என புலம்பாதவர்கள் அரிதுதான். ஏன் என்றால், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இயற்கையும் குழப்பத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறது.
இந்த சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இருந்து நம்மையும், நமது குடும்ப உறுப்பினர்களையும் தற்காத்துக்கொள்வது எப்படி எனப் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சல்: பெரியவர்களை விடக் குழந்தைகள்தான் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு அதிகமும் பாதிக்கப்படுகின்றனர். காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, பள்ளியில் ஒன்றாக இருக்கும் சூழலில் பிற குழந்தைகளிடம் இருந்து வைரஸ் தொற்று இல்லாத குழந்தைக்கும் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதைத் தடுத்து நிறுத்த முடியாது.. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குழந்தைகளைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் கைகளால் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொடக்கூடாது என்றும் அடிக்கடி பையில் இருக்கும் சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உடன் வெதுவெதுப்பான நீரில் குளிக்கச்சொல்லுங்கள், அதற்குப் பிறகு சிற்றுண்டியை உட்கொள்ளக்கொடுங்கள்.