நியூயார்க்: பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடலிலும், மனதிலும் சில அறிகுறிகள் தென்படும். உடல்வலி, சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படக்கூடும். மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் என்பது உலகளவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாதவிடாய் சுழற்சிக்கு முன் ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ப்லோ (Flo) என்ற ஹெல்த் செயலி மூலம், 140 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 55 வயதுடைய 2,38,000-க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பாக கருத்துக்கேட்டு, அதனை பகுப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், 85.28 விழுக்காடு பேருக்கு அதிகப்படியான பசி முக்கிய அறிகுறியாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 64.18 விழுக்காடு பேருக்கு மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படுவதாகவும், 57.3 விழுக்காடு பேருக்கு சோர்வு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.