பிரிட்டன்: பழங்கள், காரமான நொறுக்குத்தீனிகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி உட்கொள்வதால் மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் ஆஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 428 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டது. பழங்கள் மற்றும் இனிப்பு - காரமான தின்பண்டங்கள் உண்பதற்கும், உளவியல் பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
அதில், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைவான தின்பண்டங்கள்(ஜங்க் புட்ஸ்) மனிதர்களின் உளவியல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது. பழங்கள் சாப்பிடுவதின் அளவை தாண்டி, அடிக்கடி பழங்கள் சாப்பிடுவோரின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும், அவர்களுக்கு மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மறுபுறம் ஜங்க் புட்ஸ் என்றழைக்கப்படும், அதிக இனிப்பு, காரம் மிகுந்த சுவையான நொறுக்குத்தீனிகளை உண்பவர்களுக்கு, பதட்டம், கவலை, விரக்தி போன்ற மன நல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.