வாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலாந்தை சேர்ந்த டேவிட் பென்னட் என்ற 57 வயது நபருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இவருக்கு வேறு ஒருவரின் இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற இக்கட்டான நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர். இதையடுத்து மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.
இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை.
எனவே மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.