சென்னை: நமது புற அழகை தீர்மானிப்பது முகம் மட்டுமில்லை, பற்களும் தான். நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் சிரிப்பு, பிறருக்கு முக சுளிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. பற்களை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் உண்ணும் உணவுகள் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றி விடும். பற்களில் கறை ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதையும், பற்களில் கறை படியாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பற்களில் கறை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?:பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணம், சரியாக பல் துலக்காமல் இருப்பது. சரியாக பல் துலக்காமல் இருக்கும் பட்சத்தில், உணவுத் துகள்கள் பற்களில் படிந்து கறையை ஏற்படுத்தும். பற்கள் சீராக இல்லாமல் இருப்பதும் கறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது பற்கள் சீராக இல்லாமல் இடையே உள்ள இடைவெளியோடு இருக்கும் பட்சத்தில், பல் துலக்கினாலும் தூத் பிரஷ் சரியாக சுத்தம் செய்யாது. இதன் காரணமாக பற்களில் பிளேக் உருவாகி மஞ்சள் கறை ஏற்படும்.
உணவுகளாலும் கறை ஏற்படும்:சில உணவு வகைகளும் பற்களில் கறையை ஏற்படுத்தும் என பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதும் பற்களில் கறைகளை ஏற்படுத்தும். மேலும் அடிக்கடி டீ, காபி, கோக், ரெட் ஒயின் போன்றவற்றை குடிப்பதாலும் பற்களில் விடாபிடியான கறைகள் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் அதிகளவு புளோரைடு (Fluoride) உள்ள தண்ணீரை குடிப்பதாலும் பற்களில் கறை ஏற்படும்.