கரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) என்ற வார்த்தையை முதன்முறையாகக் கேட்டதிலிருந்தும், அதனால் உலகம் முழுவதும் எப்படி மாறியது என்பதிலிருந்தும் நாம் வெகுதொலைவு வந்துவிட்டோம். முகக்கவசங்களை அணிந்து கொள்வது, தனிமனித இடைவெளியை பராமரிப்பது என்பவை நமக்குப் புதிய இயல்பாக மாறியுள்ளது. தடுப்பூசி இல்லாத நிலையில், தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான மிக முக்கியமான யுக்திகளில் ஒன்று தனி மனித இடைவெளியாகும்.
விலகியிருத்தல் என்பது அடிப்படை மனித இயல்புகளுக்கு முரணானது, மற்றவர்களுடன் இணைந்திருப்பதற்கான ஆழ்ந்த மனித உள்ளுணர்வுகளுக்கு எதிரானது. குடும்பம் மற்றும் நண்பர்களுடனான தொடர்புகள் குறைந்து வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல், குடும்ப விழாக்கள் எதுவுமில்லாமல், கோவிட்-19 தொற்றுநோய், நம் அனைவருக்கும் ஒரு பெரிய அழுத்தமாக மாறியுள்ளது.
குறிப்பாக, வைரஸைப் பற்றிய பயம் மற்றும் கவலையைக் கையாள்வது, நெருங்கிய குடும்ப உறுப்பினர் உடல் நிலை சரியில்லாமல் போவது பற்றிய கவலைகள், பொருளாதார சிக்கல்கள் போன்றவை காரணமாக வைரஸ் பாதிப்பில்லாத குடும்பங்களுக்குக்கூட மன அழுத்தத்தைத் தவிர்ப்பது என்பது இயலாததாகி உள்ளது.
தற்போது தொற்றுநோயுடன் வாழ்க்கை நடத்துவது என்பது பலருக்கு கடினமாக இருந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஏழை மக்கள் மற்றும் மக்கள் தொகையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான தினசரி கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. கோவிட்-19 தொற்று நோயைத் தடுக்க முன்னணியில் இருந்து போராடும் சுகாதாரப் பணியாளர்களை நாம் மறந்துவிடக் கூடாது.
எனவே, கோவிட்-19 தொற்றுநோய்க்கு பொது சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக மன ஆரோக்கியத்தைப் பற்றி, சிந்திக்க வேண்டியது அவசியம். கோவிட்-19 பரவலை சமாளிப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு முக்கிய செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் அதே சமயம், பொது சுகாதார இயக்கங்கள் சமூக ரீதியாக இணைக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்த வேண்டும்.
கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க பின்வரும் எளிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்: சுய தனிமை மற்றும் சமூக இடைவெளியானது சலிப்பு மற்றும் விரக்தி உணர்வுகளை ஏற்படுத்தும். தொலைபேசி அழைப்பின் மூலம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ளுங்கள்; மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பற்றி பேசுங்கள். இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது, தனியாக இருப்பது போன்ற தவறான சமாளிக்கும் முறைகளைத் தவிர்க்கவும்.
தினசரி நடைமுறைகளை கடைப்பிடியுங்கள்: தினசரி நடைமுறைகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள், தூங்குங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் பொழுதுபோக்குகளை மீண்டும் தொடங்குங்கள், நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள். எப்போதும் போதுமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
மன அழுத்தங்களிலிருந்து விலகி இருங்கள்: கோவிட்-19 பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேட்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். கோவிட்-19லிருந்து மீண்ட நபர்களின் நேர்மறையான அனுபவங்களைப் பற்றிய நேர்மறையான ஊக்கமளிக்கும் செய்திகளைக் கேட்பதன் மூலமாக பதற்றத்தைத் தூண்டும் எதிர்மறை செய்திகளைத் தவிர்க்கலாம்.
எதிர் மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் நிர்வகிக்கவும்: உங்கள் எண்ணங்கள், சரிதானா அவை உண்மையா? உங்களுக்கு உதவுமா? அவசியமா? என்று சோதிக்கவும். அது போன்ற எண்ணங்கள் சிக்கல்களைத் தீர்க்க உங்களுக்கு உதவாமல், அதற்குப் பதிலாக உங்கள் கவலைகளையும் சோகங்களையும் அதிகரிக்கிறது என்றால், அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மேகங்கள் போல அவற்றைக் கடந்து செல்ல அனுமதிக்கவும். காரணம் இல்லாத எண்ணங்களைத் தவிர்ப்பது எதிர்மறை உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் குறைக்க உதவுகிறது. கோவிட்-19 தொற்றுநோய் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், நம் எண்ணங்களையும் செயல்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் சொல்வதைக் கேட்பதன் மூலமும், அவர்களின் சிரமங்களை ஒப்புக்கொள்வது, அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவது, அவர்களுக்கு உறுதியளிப்பது, சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆதரவை வழங்குவது போன்ற செயல்கள் மூலம் அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுங்கள். மொபைல் மற்றும் பிற சாதனங்களின் அதிகப்படியான பயன்பாட்டைத் தடுக்கவும், கேஜெட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அவர்களுடன் மனம்விட்டு பேசவும். அவர்களின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக பிற செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.