தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

கண் தானம் செய்யுங்கள், உலகை அழகாக்குங்கள்!

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள் தேசிய கண் தான வாரங்களாக அனுசரிக்கப்படுகின்றன. கண் தானம் செய்வதன் முக்கியத்துவம், தானம் செய்ய மக்கள் தயங்குவதற்கான காரணங்கள், அதற்கான விளக்கங்கள் குறித்த செய்தித் தொகுப்பு...

By

Published : Aug 25, 2020, 3:45 PM IST

கண் தானம் செய்வதில் உள்ள மூடநம்பிக்கை
கண் தானம் செய்வதில் உள்ள மூடநம்பிக்கை

நமது உடலின் எந்த உறுப்பை எடுத்துக்கொண்டாலும் உடலின் சீரான செயல்பாடுக்கு அது முக்கிய பங்காற்றும். அதன்படி இயல்பான வாழ்க்கையை வாழ ஒளியின் அழகினை உணர, இயற்கையை ஆராதிக்க நமக்கு உதவுபவை நம் கண்கள்தாம்.

ஆனால் பலருக்கு அந்த ஆசிர்வாதம் கிடைப்பதில்லை. பிறந்ததில் இருந்தே கண்களில் ஏற்படும் கோளாறு, சில எதிர்பார்காத சம்பவங்கள், விபத்து என பல காரணிகளால் பலர் பார்வையை இழந்துவிடுகின்றனர். நம் கண்களை தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற பலரின் வாழ்க்கைக்கு நம்மால் ஒளிரூட்ட முடியும்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள் தேசிய கண் தான வாரங்களாக அனுசரிக்கப்படுகின்றன. கண் தானம் செய்வதன் முக்கியத்துவத்தையும், இறந்தப் பின் கண் தானம் செய்வதற்கு மக்கள் உறுதிமொழி எடுக்க ஊக்கவிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகவே இந்தக் கண் தான வாரங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

கார்னியல் நோய்கள்தான் (கார்னியா எனப்படும் கண்ணின் முன்புறத்தை மறைத்திருக்கும் திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு) கண்பார்வை குறைபாடுக்கு இட்டுச் செல்லும் நோய்களுள் முக்கியமானதாக கருதப்படுகிறது என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

தேசிய சுகாதாரத் திட்டம் கண் தானம் செய்ய மக்கள் முன்வராததன் காரணங்கள் குறித்து விளக்குகிறது:

  • மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாதது.
  • பணியாளர்கள் குறிப்பாக பயிற்சி பெற்ற பணியாளர்கள் மத்தியில் உத்வேகப்படுத்துதல் இல்லாமை.
  • சமூகம், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகள்.

மக்கள் சொல்லும் காரணங்கள் என்னென்ன?

"எனது கண்பார்வை தெளிவாக இல்லை, அதனால் என்னால் கண்தானம் செய்யமுடியாது"

விளக்கம்: கண்தானம் செய்வதற்கு குறைபாடுள்ள கண்பார்வை தடையாக இருக்காது. கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற காரணங்களுக்காக கண் கண்ணாடி அணிபவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள்கூட கண்தானம் செய்யலாம். வயது, இரத்த வகை, பாலினம் என எந்த காரணங்களும் இதற்கு தேவையில்லை.

"நான் அடுத்தப் பிறவியில் குருடாகப் பிறப்பேன்"

விளக்கம்: இது மிகப் பெரும் மூடநம்பிக்கை. கண், பிற உடல் உறுப்புகளை தானம் செய்வது மிகவும் நன்மை செய்யும் செயல். ஒருவேளை மறு ஜென்மம் என்ற ஒன்று இருந்தால் உங்களது ஆன்மாதான் வேறு உடலுக்குள் செல்லும். உடல் குறைபாடுகள் வேறு உடலுக்குச் செல்லாது.

"கண்தானம் எனது முகத்தை கெடுத்துவிடும்"

விளக்கம்: கண் தானம் செய்வதற்கு உங்கள் கண்களின் கார்னியவைத்தான் எடுப்பார்கள். முழு கண்களை எடுக்கமாட்டார்கள். ஒருவேளை எடுத்தாலும் அதற்கு மாற்றாக ப்ராஸ்தடிக் வைக்கப்படும். அதனால் கண் இருக்குமிடத்தில் துவாரங்கள் இருக்காது.

"கண்தானம் செய்பவரின் குடும்பத்தினரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும்!"

விளக்கம்: இது மற்றுமொரு தவறான கருத்து. இறந்த நபரிடம் இருந்து கண் தானம் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இது ஒரு தொண்டு சேவைபோலத்தான்.

"நான் கண்களை தானம் செய்தால் மருத்துவருக்கு பணம் கிடைக்கும்"

விளக்கம்: இல்லை. ஒரு நபரின் கண்களையோ வேறு உறுப்புகளையோ விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். நன்கொடைப் பணியில் பணம் என்பதற்கு இடமில்லை.

"கண் தானம் செய்வதன் செயல்முறை நீண்ட நேரம் பிடிக்கும்"

விளக்கம்: ஒரு நபர் இறந்தப் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் அறிவிக்கப்பட்டதும் 15- 20 நிமிடங்களில் வேலை முடிந்துவிடும்.

இதையும் படிங்க... கரோனாவை எதிர்க்கும் உணவுகள் இவைதானாம்!- பரிந்துரைக்கப்படும் உணவுகள்

ABOUT THE AUTHOR

...view details