தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகளையும் தாக்கும் மன அழுத்தம்: பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டியது.!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 6:11 PM IST

How to Manage kids with mental stress: வீடுகளில் குழந்தைகள் மன அழுத்தத்துடன் காணப்பட்டால் அதற்கான காரணம் மற்றும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது அவர்களுக்கு என்ன மன அழுத்தம் வந்துவிடப்போகிறது என நினைக்க வேண்டாம். பெற்றோரின் அறியாமை இங்குப் பல குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகக் காரணமாகி இருக்கிறது.

உங்கள் குழந்தையின் முகத்தில் இயல்பான புன்னகை இல்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒன்றாக விளையாடச் செல்வது இல்லையா? எப்போதும் அமைதியாக எதையாவது சிந்தித்தவாறு இருக்கிறார்களா? அறையில் தனியாக உட்காரவோ அல்லது தனிமையை விரும்பும் குழந்தையாகவோ இருக்கிறார்களா? கட்டாயம் அவர்களுக்குள் ஏதாவது மன அழுத்தம் இருக்கலாம்.

அதை ஆரம்பக்கட்டத்திலேயே தெரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இன்றைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல குழந்தைகளும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக எனப் பல இடங்களிலும், பல சூழல்களிலும் குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு அதன் காரணமாக மன அழுத்தம் அடைகின்றனர்.

குழந்தைகளுக்கான மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம்:குழந்தைகளுக்கு மனம் அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் என்று சொன்னால், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இடைவெளிதான் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். இன்றைய சூழலில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராடும் பெற்றோரும் சரி, வசதி இருந்தும் தங்களின் விருப்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெற்றோரும் சரி, வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தைச் செலவிடத் தவறுகிறார்கள்.

இதனால், கல்வி ரீதியான மன அழுத்தம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் குழந்தைகள் தங்கள் கழுத்தை நெரிப்பதுபோன்ற உணர்வைச் சந்தித்து கடைசியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.

குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கப் பெற்றோர் செய்ய வேண்டியது;உங்கள் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவிடுங்கள். அவர்கள் சந்திப்பது உங்கள் அனுபவத்திற்குச் சிறிய பிரச்சனையாகத் தெரியலாம். ஆனால் அது குழந்தைகளுக்குப் பெரிய பிரச்சனையாகத் தோன்றும். அந்த சூழலில் குழந்தைகளிடம் கூறுங்கள் " உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நான் இருக்கிறேன்.. தைரியமா இரு.. அப்பா பாத்துப்பேன்.. அல்லது அம்மா பாத்துப்பேன்" என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தை அவர்களின் மனதிற்குப் புத்துணர்ச்சியும், புதிய நம்பிக்கையும் வழங்கும் என உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குழந்தைகளின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்;குழந்தைகள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அவர்களைத் திட்டியோ அல்லது மிரட்டியோ அச்சுறுத்தாமல் மெதுவாக அவர்களின் மனதில் இருக்கும் பிரச்சனையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைத் தொடர்ந்து "அந்த பிரச்சனை வெறும் ஜூஜூபி மேட்டர்.. இதுக்கா இவ்ளோ ஃபீல் பன்னுறே" என அவர்களின் மொழியிலேயே உங்கள் அறிவுரைகளை எடுத்துக்கூறுங்கள்.

அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை உங்கள் வாழ்கையில் நடந்த மற்றொரு பிரச்சனையுடன் ஒப்பிட்டு அதை எப்படிச் சமாளித்து வந்தீர்கள் என்ற அனுபவ கற்றலை எடுத்துக்கூறுங்கள். அது மட்டும் இன்றி வாழ்க்கை என்றால் பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதைச் சமாளித்து ஜெயிப்பவர்களுக்குத்தான் வாழ்க்கை முதல் பரிசை வழங்கும் எனச் சொல்லிக்கொடுங்கள்.

பிரச்சனைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும்; நமது அன்றாட வாழ்வில் சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும், அது இயல்பான ஒன்று எனவும் அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும் என்பதைப் புரிய வையுங்கள். சிற்பம் உருவாக வேண்டும் என்றால், கல் உளியின் அடியைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் எனப் பல உதாரணங்களோடு புரிய வையுங்கள்.

பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கும்போது தவறு செய்தால் ஆசிரியர் திட்டுவதும் இயல்புதான் எனவும் அது உன் வாழ்க்கையைச் செதுக்க ஆசிரியர் செய்யும் சேவைப் பணி என்பதை எடுத்துக்கூறுங்கள். மேலும், அவமானம் என்பது அடுத்த கட்ட வெற்றிக்கான படிக்கல் எனவும், அதற்காகத் தற்கொலை முடிவோ, கோபம் கொண்டு மேற்கொள்ளும் வேறு எந்த முடிவும் தோல்வியாளனுக்கு உடையது என்பதைப் பக்குவமாக எடுத்துக்கூறுங்கள்.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடியாக பதிலளியுங்கள்;பள்ளியிலோ அல்லது சமூகத்திலோ உங்கள் குழந்தை ஏதேனும் வன்முறை தூண்டுதலுக்கோ அல்லது தீண்டுதலுக்கோ உட்படுத்தப்பட்டால் அதற்கு உடனடியாக தீர்வு காணுங்கள். உங்கள் குழந்தை எதிர்கொண்ட பிரச்சனைக்கு நீங்கள் முன் நின்று நியாயம் பெற்றுத் தரும்போது அவர்கள் உங்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் ஏன் அவர்கள் அவர்கள் மீதே நம்பிக்கை கொள்வார்கள்.

அன்றாட திட்டமிடுதலைப் பழக்கப்படுத்துங்கள்;குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்தல், உணவுப் பழக்க வழக்கம் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுப் பயணிக்கக் கற்றுக்கொடுங்கள். வேலைகளை ஒன்றொன்றாகச் சேர்த்து வைத்தால் அதை என்றாவது ஒருநாள் மொத்தமாகச் செய்ய நேரிடும் எனவும் அது மிகச் சுமையாக இருக்கும் எனவும் சொல்லிக்கொடுங்கள்.

அவர்கள் வேலைகளை அவர்களையே செய்ய வைத்து நீங்கள் பக்கத்தில் இருந்து உதவுங்கள். மேலும் நாள்தோறும் காலையில் எழுவது, உடற்பயிற்சி செய்வது, பள்ளிக்குச் செல்வது, வீட்டுப்பாடம் செய்வது, தூங்குவது உள்ளிட்ட அனைத்தையும் நேரத்துக்கு ஏற்ப செய்தால் மன அழுத்தம் இருக்காது என்பதை உணர வையுங்கள்.

உடற்பயிற்சி செய்வதன் பலன்; உடலை பலமாக்கினால் மனம் எளிதாகும் எனவே நாள்தோறும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வையுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி, யோகா போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அதன் நன்மைகள் குறித்து குழந்தைகளுடன் அடிக்கடி உரையாடுங்கள்.

நேர்மறையான மனதை ஏற்படுத்துங்கள்;வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் ஏற்றுக்கொள் எனவும், நாம் செய்ய வேண்டிய செயலை மட்டும் சரியாகச் செய்தால்போதும் வெற்றி தானாக வரும் எனவும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள். மதிப்பெண் குறைந்து விட்டது என அதட்டி அச்சுறுத்தவும் வேண்டாம்... நூற்றுக்கு நூறு வாங்கி விட்டார்கள் எனத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும் வேண்டாம். குழந்தைகளுக்குப் பக்க பலமாக இருந்து மன அழுத்தம் ஏற்படாமல் பக்குவமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.

இதையும் படிங்க:உடல் எடையைக் குறைக்க சிரமப்படுகிறீர்களா? அப்போ இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details