தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 4, 2020, 4:03 PM IST

Updated : Aug 4, 2020, 8:42 PM IST

ETV Bharat / sukhibhava

கருவுறாமல் தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா? - மகப்பேறு ஆலோசகர் டீனா விளக்கம் (பாகம்-1)

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது.

டீனா அபிஷேக்
டீனா அபிஷேக்

ஒரு கருவை 40 வாரங்கள் தனக்குள் பொதிந்து, அதை பூமிக்கு உயிராகக் கொடுக்கும் பெண் உண்மையில் எத்தனை அற்புதமானவள். இந்தியாவில் ஒரு பெண் பூப்படைவதும், கருவுறுவதும் அவளுக்கானப் பொறுப்புக்களை அதிகரிக்கின்றன. குறிப்பாக,பிரசவித்த பெண்ணிற்கு அறிவுரைகள் சொல்ல ஒரு ஊரே திரண்டு வரும். இந்த அறிவுரைகள் உண்மையாகவே அவளுக்கானதா? இதனால் அவளுடைய மனம் மகிழ்ச்சியடைகிறதா? எனக் கேட்டால் 99.9 விழுக்காடு ’இல்லை’ என்ற பதில்தான் வரும்.

ஆனால் அவளுக்கு அந்த கருவுற்ற காலமும், பிரசவிக்கும் காலமும் முற்றிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில், குடும்பத்தின் ஆதரவும் தேவை. அவள் தனிப்பட்டவள் அல்ல. தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது, பிரசவித்த பெண்ணின் குடும்பத்தினர் என்னென்ன செய்ய வேண்டும் என மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக்கிடம் கேட்டோம்.

மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பைக் குறைக்குமா?

நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது. ஒரு பிரசவித்த பெண்ணிற்கு தாய்ப்பால் சுரப்பதில் உணவின் பங்கைவிட ஹார்மோன்களின் பங்குதான் அதிகம். மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் புரோலக்டின் மற்றும் ஆக்சிடோடின் (prolactin and oxytocin) ஆகிய இருஹார்மோன்களும் தாய்ப்பால் சுரப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. ஹப்பி ஹார்மோனான ஆக்சிடோசின், புரோலக்டின் ஆகிய இரண்டும் அதிகமாக சுரக்கும்போது பால் சுரப்பும் அதிகமாகும். இதற்கு பெண்களின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அதே சமயம் கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்கள் உணவில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பிரசவித்த பெண்ணின் குடும்பத்தார் கவனத்திற்கு...

பெண்களின் மனநிலையில் குடும்பத்தார் முக்கிய பங்காற்றுகின்றனர். குழந்தைக்கு பால் கொடுப்பது தாயின் வேலை, கடமை என குடும்பத்தார் விலகி நிற்காமல், அந்த பெண்ணிற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவது அவசியம். சில பெண்களுக்கு குழந்தையின் வாயை மார்பகத்தில் வைப்பதில் சிக்கல் இருக்கலாம். ஆகவே குடும்பத்தார் பிரசவித்தப் பெண்களுக்கு Latching முறையைக் கற்றுக்கொடுக்கலாம். முறையாக தெரிந்து கொள்ள ஆலோசகரைத் தொடர்பு கொள்ளலாம். இதனால், தாய், சேய் இருவருக்குமே தன்னிறைவு ஏற்படுகிறது.

தன்னம்பிக்கையே ஜெயம்!

குறிப்பாக, ஒவ்வொரு பெண்ணும் குழந்தைப்பேறு அடைந்து அக்குழந்தையைப் பெற்று வளர்ப்பது வெவ்வேறு வகையான பயணமே தவிர, ஒரே மாதிரியானதல்ல. அதனால் பிற தாய்மார்களோடு பிரசவித்த பெண் தன்னை ஒப்பிடுவதோ அல்லது அந்த பெண்ணின் குடும்பத்தார் ஒப்பிட்டு பேசுவதோ சரியான அணுகுமுறையல்ல. இதுவும் மன அழுத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளது.

‘ஹே நீ குழந்தையை நல்லா பாத்துக்குற’ என தாயிடம் சொல்லிப் பாருங்கள், எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் அந்த குழந்தைக்கு பாலூட்ட அத்தாய் தயாராகிவிடுவாள். இந்த வார்த்தைக்குள் அவ்வளவு தன்னம்பிக்கையளிக்கும் மந்திரத்தன்மை ஒளிந்திருக்கிறது.

குழந்தையின் சின்னசின்ன அசைவுக்கும் தாயை பழி சொன்னால் தாயின் எதிர்காலம் மட்டுமல்ல, கூடவே சேயின் எதிர்காலமும் பாதிக்கும் என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் அளவு

குழந்தை பிறந்த முதல் பத்து நாள்களில் ஏற்படும் எடையிழப்புக்கு தாய்ப்பால் பற்றாக்குறைதான் காரணமா?

இப்படிச் சொல்வது வெறும் கட்டுக்கதைதான். இதில் தாயைக் குறை சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கருப்பையில் குழந்தையைச் சூழ்ந்திருக்கும் ஆம்னியாடிக் திரவத்தை குழந்தைகள் அருந்திக் கொண்டேயிருப்பதால், அவர்களின் உடலில் நிறைய தண்ணீர் இருக்கும். இந்நிலையில் தாயின் பிரசவத்தில் வெளிவரும் குழந்தை முதல் 10 நாள்களில் இத்திரவத்தை இழப்பார்கள். இந்நேரத்தில் குழந்தையின் தேவைக்கேற்ப ஒவ்வொரு இரண்டு மணிக்கூறுகளுக்கு ஒருமுறையும் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். இந்த திரவ இழப்பால் குழந்தையின் சற்று எடை இழக்க நேரிடும். இது இயல்புதான்.

எப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?

முதல் ஆறுமாதம் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த 6 மாத காலத்தில் குழந்தைக்கு எவ்வித ஆகாரமும் தனியாகக் கொடுக்கத் தேவையில்லை. தாய்ப்பாலை மிஞ்சிய சத்தான ஆகாரங்கள் வேறில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் உணவுகளைக் கொடுத்தால் நிரிழிவு, ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர், செரிமானக்கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. குழந்தை பிறந்த முதல் 10 நாள்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். பிறகு குழந்தையின் தேவைக்கேற்ப பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால்தான் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியின் அடிநாதம்.

என்னென்ன உணவு வகைகள்

குழந்தை பிறந்ததும் முதல் 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் என்ன?

குழந்தை சுகப்பிரசவமோ, சிசேரியனோ முதல் 1 மணி நேரத்தில் தாயின் மார்பில் பாலூட்ட வேண்டியது அவசியம். இப்படி செய்வதால் குழந்தையை லேட்சிங் (மார்புக்காம்பில் வாய் வைக்கும் முறை) செய்ய வைப்பதில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பில்லை. குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கும் இது முக்கிய காரணியாக அமைகிறது.

மதரிங் ஹார்மோன் என்றால் என்ன?

தாய்மை உணர்வை அதிகமாகத் தூண்டும் புரோலாக்டின்தான், மதரிங் ஹார்மோன். இதுதான் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அளவுக்கு ஒரு தாயைப் பண்படுத்தும். ஒரு பெண்ணை நோக்கி, 'உனக்கு குழந்தையின்மீது அக்கறையில்லை, குழந்தையை தூக்க தெரியவில்லை' என வார்த்தைக் கணைகளை வீசினால் அப்பெண் மனமுடைந்து போவாள். தான் ஒரு நல்ல தாய் இல்லையென தனக்குள்ளாகவே சொல்லிக் கொள்வாள். இது போன்ற சிக்கல்களைக் களைய குடும்பத்தினர் ஆதரவு நிச்சயம் தேவை. ஒருவேளை இந்த சிக்கல்கள் தொடர்ந்தால் பால் சுரப்பில் பிரச்னைகள் வெடிக்கும்.

மதரிங் ஹார்மோன்

கரோனா காலத்தில் தாய்க்கு நோய்த் தொற்று தீவிரமாக இருந்து, பால் கொடுக்க முடியாவிட்டால் அது வீண்தானே?

தாய்ப்பால் எப்போதும் வீண் அல்ல. அந்த காலக்கட்டத்தில் சுரக்கும் பாலைக் கூட ரீலாக்டேஷன் செய்ய முடியும். இதற்கென சில வழிமுறைகள் உண்டு. ஆனால் அதை மகப்பேறு ஆலோசகர் (அ) மருத்துவரிடம்தான் கேட்டு முறையாக செய்ய வேண்டும்.

கருவுறாமல் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைகளுடன் ஏற்படும் பிணைப்பு (bond) அதன் மூலம் கிடைக்கும் தன்னிறைவு வரம். இது வாடகைத்தாய் மூலமாக (அ) கருமுட்டைதானம் பெற்று குழந்தைகளை பெறுபவர்கள், தத்தெடுப்பவர்களுக்கு கனவாக இருக்கும். அவர்களுக்காகவே பிரத்யேகமாக உண்டான முறைதான் இண்டியூஸ்டு லாக்டேஷன் (induced lactation). இந்த முறையில் தாய்ப்பால் சுரப்பைப் பெற முறையாக மருத்துவ ஆலோசனைப் பெறுவது அவசியம். இதன் மூலமாக, குழந்தையைப் கருவுற்றுப் பெற்றுக் கொள்ளாமலேயே பாலூட்ட முடியும். குறிப்பாக, இதற்காக அவர்கள் 4 (அ) 5 மாதங்களுக்கு முன்பாகவே முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று தாய்ப்பால், மகப்பேறு குறித்த சந்தேகங்கள் குறித்த விரிவான பதில்களை அடுத்த பாகத்தில் காணலாம். (தொடரும்)

இதையும் படிங்க: தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?

Last Updated : Aug 4, 2020, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details