விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் வசித்துவந்தவர் சங்கிலி ராஜன் (48). இவர் தேமுதிக திருத்தங்கல் நகர முன்னாள் செயலாளராக பொறுப்பில் இருந்திருந்தார். பின்னர் அக்கட்சியின் உறுப்பினராக செயல்பட்டுவந்த அவர் திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் மளிகைக் கடை வைத்து நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில் திருத்தங்கலிலிருந்து அதிவீரன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் இவர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் படுகொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார்.
ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை சம்பவம் நடந்ததால் யாருக்கும் தெரியாத நிலையில் தோட்டத்து வேலைக்குச் சென்ற நபர்கள் கொலை சம்பவத்தைப் பார்த்து திருத்தங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து விருதுநகரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலையான தேமுதிக பிரமுகர் சங்கிலி ராஜனுக்கும் திருத்தங்கலைச் சேர்ந்த ராமதிலகம் என்கிற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. ராமதிலகம் திருமணம் முடிந்து கணவரைப் பிரிந்து தனது பாட்டி சோலையம்மாள் வீட்டில் வசித்துவருகிறார். அப்பெண் வீட்டிற்கு சங்கிலி ராஜன் அடிக்கடி வந்துபோவது வழக்கம்.