விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி உடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வந்தபோது சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
ஓடையை கடக்க முடியாமல் சிக்கித்தவித்த பக்தர்கள் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறை, வனத் துறை, காவல் துறை அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களை 5 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி பத்திரமாக மீட்டனர். மேலும் கோயிலுக்குச் சென்ற 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாததால் கோயில் மலைப்பகுதியிலேயே பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் தினேஷ்குமார் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு பக்தர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு!