தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2021, 6:16 PM IST

Updated : Feb 12, 2021, 6:30 PM IST

ETV Bharat / state

வெம்பக்கோட்டை வெடி விபத்து - இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: வெம்பக்கோட்டை அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (பிப். 12) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

cm relief fund
வெம்பக்கோட்டி வெடி விபத்தில் இறந்தவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப். 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 11 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் செய்தியை அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். மேற்கண்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் 36 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அலுவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவும் விருதுநகர் ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கோடைக்காலம் விரைவில் தொடங்க இருப்பதால், வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

Last Updated : Feb 12, 2021, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details