விருதுநகர்: ராஜபாளையம் முடங்கியார் தெரு சாலையில் உள்ள சோமையாபுரத்தைச் சேர்ந்த ஜனகன் என்பவரது மனைவி பொன்னழகு (32), ஜனகன் தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றிவரும் நிலையில், பொன்னழகு தனது மகள்கள் இருவருடன் வசித்துவந்தார்.
இந்நிலையில் பகல் சுமார் ஒரு மணி அளவில் மருந்து வாங்குவதற்காக பொன்னழகு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். காந்தி சிலை அருகே இவரது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சேலத்திலிருந்து கடையத்திற்கு சோப்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி இவரது வாகனத்தின் பின்புறம் மோதியது.
இதில் நிலைகுலைந்து தவறிவிழுந்த இவரின் தலையில் லாரி சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். இவரது உடலைக் கைப்பற்றிய வடக்கு காவல் நிலைய காவலர்கள் உடற்கூராய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.