விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
இதன் பின் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், “கரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிர்காக்கும் பொருட்டு, உயிர் காக்க தேவையான ஆக்சிஜன் வெளி மாநிலங்கள், வெளிநாட்டிலிருந்தும், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பதன் மூலமும் தங்கு தடையின்றி ஆக்சிஜன் பெறப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகப்பேறு மருத்துவமனையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக பிரதமரின் குடிமக்களுக்கான அவசரகால உதவி மற்றும் நிவாரண நிதியின் (PM CARES - Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situation Fund) கீழ், மத்திய ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ரூ.97.40 இலட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.