விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள துலுக்கன்குளம் பகுதியில் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவினரைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு தரப்பினர் வளர்த்து வந்த நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதில், இருசக்கர வாகனம் மீது மோதிய நாய், படுகாயம் அடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இரு பிரிவினரிடையே ஏற்பட்ட இந்த வாய் தகராறு பின்பு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கைகலப்பில் ஜெயக்குமார், உதயகுமார், உமா மகேஸ்வரி ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலுக்குக் காரணமான வீரணன், ரஞ்சித்குமார், கருப்பசாமி ஆகிய மூன்று பேரை வன்னியம்பட்டி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தகராறு ஏற்பட்ட பகுதி மக்களிடம் விசாரணை நடத்தும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும், 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினரிடையே வன்னியம்பட்டி காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா... கஞ்சா இழுப்பதில் தகராறு!