விருதுநகர்:தூத்துக்குடியிலிருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்தையன்(64) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலையைக் கடக்கும் போது மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் லாரி சென்று கொண்டிருக்கும்போது திடீரென பஞ்சர் ஆனதால் லாரி ஓட்டுநர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே லாரியை ஓரமாக நிறுத்தி மாற்று டயர் மாற்றிக் கொண்டிருந்தார்.
அதே சாலையில் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து நின்றுகொண்டிருந்த லாரியில் பின்னால் அதி வேகமாக மோதியது. அதே வேகத்தில் பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் மீது மோதியது.
சிகிச்சை:இந்த விபத்தில் டயர் மாட்டிக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் சித்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆம்னி பேருந்து மற்றும் காரில் பயணம் செய்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.