விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பகுதியில் தெற்கு ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் வடக்கு, தெற்கு ரயில்வே குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1926ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகம் மூலம் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களில் ரயில்வே ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் குடும்பத்தோடு வாழ்ந்துவந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பில், பெரும்பாலும் ஊழியர்கள் வசிக்காமல் பலர் வெளியே சொந்த வீடுகள் கட்டியிருந்ததால், அங்கு வெளி நபர்களை வாடகைக்கு வைத்து பணம் பார்த்து வந்தனர். இது சம்பந்தமாக ரயில்வே நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்ற நிலையில், அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதை நிறுத்திவைத்தனர்.
இதனால், அடுத்தடுத்து வரும் ரயில்வே ஊழியர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு வழங்காததால், ரயில்வே குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் போதிய பராமரிப்பின்றி காலப்போக்கில் பாழடைந்து போனது. அந்த இடத்தில் உள்ள தண்ணீர் மோட்டார் கொட்டகை, ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான அலுவலகக் கட்டடங்கள், பழைய லோகோ ஷெட் உள்ளிட்ட அனைத்தும் பராமரிப்பின்றி பழுதடைந்தன.
இதுபோன்ற சூழலில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, வடக்கு ரயில்வே காலனியிலுள்ள பாழடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்குத் தனியாரிடம் ஏலம் விடப்பட்டது. இதையடுத்து, அந்தப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனம், பல வீடுகளை இடித்துவிட்டு, பராமரிப்பில்லாத சில வீடுகளை அகற்றாமல் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் வடக்கு ரயில்வே காலனியில் பாழடைந்த வீடுகள், அலுவலகக் கட்டடங்களில் சமூக விரோதிகள் சிலர் வந்து தங்கும் கூடாரமாக மாறியுள்ளது.