விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கீழ் மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (32). இருளர் இனத்தைச் சேர்ந்த இவர் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன் பின்னர் திருமணம் முடிந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டிய கணவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற பிள்ளைகளையும் மனைவியும் தவிக்க விட்டு வேறொரு பெண்ணின் மீது ஏற்பட்ட சலபத்தால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
வறுமையின் காரணமாக தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுடன் கிருஷ்ணவேணி தனது பெற்றோர் இல்லத்தில் தஞ்சம் புகுந்தார். தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் மற்றும் தனக்கான நீண்ட நாள் ஆசையான எப்படியாவது ஒரு அரசு வேலைக்குச் சென்று விட வேண்டும் என முடிவெடுத்தார்.
அரசு வேலைகளில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற வேண்டும் என அறிந்த கிருஷ்ணவேணி, ‘அம்மா கணக்கு’ பட பாணியில் மகளுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்தார். அதன்படி தனித் தேர்வில் பொதுத் தேர்வு எழுதி 206 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
3 மகள்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி படித்த கிருஷ்ணவேணியின் செயல் அந்த கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து தாய்மார்களையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தானும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என துடிக்கும் கிருஷ்ணவேணிக்கு முறையான வழிகாட்டுதலுடன் அரசு வேலை பெற்றுத் தர வேண்டும் என்பதே கிருஷ்ணவேணி மற்றும் அவர் பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.