விழுப்புரம்: விழுப்புரம் நகரிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோரது தலைமையில் இன்று (மே 28) திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கி, நிலவள வங்கிகளில் கழக தோழர்கள் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என 5 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “மும்மொழிக்கொள்கை, தமிழ் வளர்ச்சிக்கு யார் காரணம் என நேரிடையாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என நான் கேட்டிருந்ததற்கு அவர் தயார் என கூறியுள்ளார். அப்படி விவாதிக்க தயார் என்றால் சென்னையில் எந்த இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு விவாதிக்கலாம் நானும் தயாராக உள்ளேன்” என பொன்முடி தெரிவித்தார்.
அரசுக்கு தெரியாமல் ஆளுநர் வெளியிட்ட அறிக்கை?:தொடர்ந்து பேசிய அமைச்சர், “ஊட்டியில் துணை வேந்தர்களுக்கு எல்லாம் கூட்டம் 5 ஆம் தேதி புதிய கல்வி கொள்ளை தொடர்பாக நடைபெற உள்ளதாக வேந்தர் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த புதிய கல்வி கொள்கை தொடர்பாக தற்போது கூட்டம் நடத்தபட வேண்டிய அவசியமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசுக்கே தெரியாமல் துணை வேந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாகவும், அரசியலில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும், “அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்குவதாக வெளியான அறிவிப்பு திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பரந்தாமனுக்கு தெரியாமலையே இது நடந்திருக்கக்கூடும் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியானபோது, அவர் சிண்டிகேட் மெம்பராகவே இல்லை அவருக்கு எப்படி தெரியும்” என அமைச்சர் பொன்முடி கேள்வியெழுப்பியுள்ளார்.