விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி இன்று அப்பகுதி மக்களுடன் சேர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விழுப்புரம் அருகேயுள்ள பெரியசெவலை, ஆமூர், கொளத்தூர், சரவணபக்கம் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை திருவெண்ணை நல்லூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
இந்த பகுதிகளை 20 கி.மீ தொலைவிலுள்ள விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்காமல், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைத்திருப்பதால் இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நிர்வாக வசதிக்காக இவர்களை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.