தமிழ்நாடு

tamil nadu

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் - தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!

By

Published : Jul 31, 2023, 5:22 PM IST

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரண்டு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.

melpathi
மேல்பாதி

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில், பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, நீண்ட காலமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் இக்கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவதில்லை என தெரிகிறது.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூக மக்கள் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பட்டியலின மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பூதாகரமான நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கச் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. இது தொடர்பாக அப்போதைய விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் இருதரப்பினரிடமும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பட்டியலின மக்களை கோயிலுக்கு அனுமதிக்க மாற்று சமூகத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 7ஆம் தேதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இருதரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கோட்டாட்சியராக பிரவீனா குமாரி பொறுப்பேற்ற நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இரண்டாம் கட்டமாக கடந்த 7ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி இரு சமூக மக்களிடமும் தனித்தனியாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

இந்த பிரச்சினையில் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பட்டியலின மக்களும், கோயிலைத் திறக்க வேண்டும் - அதேநேரம் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என மாற்றுச் சமூக மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இன்று(ஜூலை 31) சென்னை வந்துள்ளார். இவர், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக பேசிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், "தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் குலதெய்வ கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து அபகரித்து வருகின்றது. மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் கடந்த ஒன்றரை மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. கோயிலை திறக்க வலியுறுத்தி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடத்தப்படுமென்று ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Melpathi Draupadi Amman Temple Issue: மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் - ஜூலை 7ல் இரண்டாம் கட்ட விசாரணை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details