விழுப்புரம்: மரக்காணம் அருகே தழங்காடு கிராமத்தில் டி.எஸ்.பிராபர்டிஸ் (D S Properties) மற்றும் இந்திரா புராஜக்ட்ஸ் (Indira projects) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 545 வீட்டு மனைகளுக்கு தமிழக அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய அனுமதியை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அந்தோனி ராஜ் வில்லியம்ஸ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, விதிகளை மீறி வீட்டுமனை திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், கடலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் இரண்டாவது பகுதியாக தவறாக குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதால், 2011ம் ஆண்டு விதிகள்படி கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் தொழில்நுட்ப ரீதியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.