வேலூர்:வேலூர் மாவட்டம் நாகநதி நீர் செறிவூட்டும் திட்டத்தினால் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி நேற்று(செப் .26) தனது மன் கி பாத் உரையில் குறிப்பிட்டு பேசினார். அதில், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் எடுத்துக்காட்டுகளை நான் அளிக்கிறேன். இங்கே இருக்கும் நதியான 'நாகநதி' ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுபோனது.
இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமேற்கொண்டு தங்களுடைய இந்த நதியை மீண்டும் உயிர்பித்தார்கள். மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களை தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள். மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள். இந்த நிதி இன்று நீர் நிரம்பி இருக்கிறது என்றார்.
நாகநதி திட்டம்
நிலத்தடி நீரை செறிவூட்டும் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு சலமநத்தம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக ஓடும் நாகநதி துணை காணற்றில் கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கானாற்றில் 349 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கவும், அதையொட்டி 128 சிறிய தடுப்பணைகள் கட்டவும் ரூ. 3.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
15 அடி நீளம், 6 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட ஒவ்வொரு நீர் செறிவூட்டும் கிணறு அமைக்கவும், 10 பெண்கள் கொண்ட மகளிர் குழு அமைக்கப்பட்டது. இக்கிணற்றினுள் அமைக்கப்படும் சிமெண்ட் உறைகளில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் மட்டத்தை வேகமாக உயர்த்துகிறது.
ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், கிணறுகளால் மழைக்காலங்களில் பெறப்பட்ட தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 4 அடி முதல் 7 அடி வரை உயர்ந்தது. மேலும், ஒவ்வொரு கிணற்றின் மூலமாக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடியில் செறிவூட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போதுவரை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இத்திட்டம் குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி மன் கி பாத் உரையில் பாராட்டி பேசிய பிரதமர் மோடி நேற்று(செப். 26) தனது காணொலி உரையில் மீண்டும் நினைவு கூர்ந்தார்.