வேலூர்:இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் இளங்கோ மற்றும் செயலாளர் அந்தோணி பாஸ்கரன் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி, இந்த பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரிகளின் முதல்வர்களில் இருந்து 10 உறுப்பினர்கள் பல்கலைக்கழகக் கல்விக் குழுவிற்கும், இருவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதேபோல், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் இருந்தும் 10 உறுப்பினர்கள் கல்விக்குழுவிற்கும், இந்த 10 உறுப்பினர்களில் இருவர் ஆட்சிமன்றக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 2021 ஜனவரி முதல் இரண்டு வருடங்களுக்கும் மேலாக, இந்த 24 இடங்களும் காலியாகவே உள்ளன. இவற்றுக்கான தேர்தல்களை பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை நடத்தவில்லை.
இவ்விரு ஆண்டுகளில் தேர்தல்களுக்கான வாக்களர் பட்டியல் மட்டும் இரண்டு முறை திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், தேர்தல்களை மட்டும் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்தாமல் திட்டமிட்டு தவிர்த்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 65 கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கல்விக்குழு, ஆட்சிமன்றக்குழுவில் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது.