வேலூர்: ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது.
இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஜூலை 01) கலந்து கொண்டார். மாநாட்டில் பங்கேற்ற பெண் துறவிகளுக்கு சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு, அதிகாரம்,பலம், அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழைதான் இன்று (ஜூலை01) அனைவரது நாவிலும் தவிழ்ந்துக் கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழ்நாடு.
ஆனால் தமிழ்நாட்டில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கரோனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்த வழிபாட்டோடு தான் கரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம்.
அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது. நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும் சொல்கிறது. மெய்ஞானமும் சொல்கிறது. விஞ்ஞானமும் அதை தான் சொல்கிறது.