திமுகவின் 2021க்கான "தமிழகம் மீட்போம்" என்கிற சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று (நவ. 07) வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
"ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டினார்கள் ஆனால் அவற்றை நாம் வென்று காட்டி பாடம் புகட்டியுள்ளோம். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதியற்ற அரசுதான் அதிமுக அரசு. ஜெயலலிதா இறந்ததாலும், சசிகலா சிறை சென்றதாலும், ஓபிஎஸ் தனியே சென்றதாலும் தான் எடப்பாடி முதலமைச்சரானார். காபி "கப்" பை தூக்கி எறிவது போல தமிழக மக்களை தூக்கி எறிபவர், முதலமைச்சர் பழனிசாமி.
குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. நீட் விவகாரம், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, 7 பேர் விடுதலை அண்ணா பல்கலைக்கழகம், காவிரி ஆணையம் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரட்டை நாக்கு அல்ல இருபது நாக்குகள் உடையவர் எடப்பாடி பழனிசாமி.