திருப்பத்தூருக்கு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கந்திலி புதுப்பேட்டை, ஜோலார்பேட்டை, விசமங்களம், மாடப்பள்ளி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் சவாரி நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூர் நகரில் சமீபகாலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், மீனாட்சி திரையரங்கம், புதுப்பேட்டை ரோடு, ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ நிறுத்தங்களில் சாலை மற்றும் கடைகளின் அருகில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு 10 முதல் 15 பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாருக்கு வியாபாரிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.