ஆம்பூரில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.13.60 லட்சம் பறிமுதல் - தேர்தல் ஆணையம்
வேலூர்: வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து நடந்த சோதனையின்போது, ஆம்பூர் அருகே இருவர் விட்டுச்சென்ற பையிலிருந்து ரூ. 13.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர் செல்வம் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு பறக்கும் படை அலுவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் அன்பழகன் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருவர், அலுவலர்களை கண்டதும் தங்களது கைகளில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த பையை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர்கள், அதில் பணம் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அதனை ஆம்பூர் வருவாய்த் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரின் முன்னிலையில் தணிக்கைச் செய்தனர். இதையடுத்து கைபற்றப்பட்ட பையில் 13 லட்சத்து 60 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், ஆம்பூர் வருவாய் அலுவலகத்துக்கு விரைந்த ஏழு பேர் கொண்ட வருமானத் துறையினர், பணம் தொடர்பான தகவல் வந்தபோது இது அதிமுகவினருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், பணத்தை விட்டுச்சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.