தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல் - தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் கைது! - ரவுடிகளை கைது செய்த வேலூர் காவலர்கள்

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகளான வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரையும் மாவட்ட தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 28, 2023, 8:40 PM IST

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா என்கிற வசூர் ராஜா (36). பிரபல ரவுடியான இவர் மீது பல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளி காட்பாடியைச் சேர்ந்த நாகப்பன் மகன் வெங்கடேசன் (34). தலைமறைவாக இருந்த இவர்களை வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷா என்பவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு ரவுடி ராஜா மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்புகொண்ட ராஜா, 3 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் அவரது குடும்பத்தை கொலை செய்துவிடுவதாகக் கூறி மிரட்டியிருகிறார்.

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பாஷாவும், அவரது கடையில் வேலை செய்யும் சலீம் ஆகிய இருவரும் தனியார் தோல் தொழிற்சாலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சொகுசு காரில் சென்ற ராஜா, ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து பாஷா மற்றும் சலீமை வழிமறித்து வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வைக்காவிடில் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கின்றனர். மேலும், பாஷா வைத்திருந்த 20ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.

உடனடியாக இந்தச் சம்பவம் தொடர்பாக பாஷா சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட தனிப்படை காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரவுடி ராஜா, அவரது கூட்டாளி வெங்கடேசன் ஆகிய இருவரையும் பெருமுகை அருகே வைத்து தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையல் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:வெளிநாட்டு பெண் உயிரிழப்பில் மர்மம் - திருவண்ணாமலையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details