தமிழ்நாடு

tamil nadu

மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது!

By

Published : Apr 27, 2023, 3:00 PM IST

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சொத்துப் பிரச்னை காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

Police
வேலூர்

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், செல்வம் (62). இவர் தேங்காய் மண்டியில் கூலி வேலை செய்து வந்தார். இவர் எப்போதும் வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகை முன்பு உறங்குவது வழக்கம்.

கடந்த 25ஆம் தேதி இரவு வழக்கம்போல் உறங்கச் சென்ற செல்வம், அடுத்த நாள் காலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற லத்தேரி காவல்துறையினர், செல்வத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த செல்வத்திற்கும் அவரது மருமகன் பிரபாகரனுக்கும் பிரச்னை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ''மாமனார் செல்வத்திடம் உள்ள 71 சென்ட் நிலத்தில் தனது மனைவிக்கும் பங்கு இருப்பதாகவும், அந்தப் பங்கை தனக்கு எழுதித்தரச் சொல்லி பிரபாகரன் நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார்.

பல முறை மதுபோதையிலும் சென்று பிரச்னை செய்துள்ளார். அதேபோல் கடந்த 25ஆம் தேதியும் தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்தை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த பிரபாகரன் மாமனாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இரவு அனைவரும் உறங்கிய பிறகு வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த மாமனார் செல்வத்தை, மருமகன் பிரபாகரன் கல்லால் தாக்கியுள்ளார். வலியால் செல்வம் அலறித் துடித்தபோது, சத்தம் கேட்கக்கூடாது என்பதற்காக தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார். அதில் மூச்சுத்திணறி செல்வம் இறந்துவிட்டார். ஆத்திரம் அடங்காத பிரபாகரன் அதன் பிறகும் செல்வத்தை தாக்கியுள்ளார்" என்று தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக மாமனாரை மருமகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details