வேலூர்:ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான இடத்தில் மின்சாரத் துறை சார்பில் மின்மாற்றி (transformer) வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மின்மாற்றியை தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றக் கோரி மின்சாரத் துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரத் துறை அதிகாரி மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என்றால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலாகும் எனவும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றால் தனக்கு கமிஷன் வழங்க வேண்டும் என்று ஆற்காடு மின்சாரத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் தனலட்சுமி கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னால் பணத்தைத் தர முடியாது எனக்கூறிய கோவிந்தராஜ் தன்னுடைய மனுவைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார். பின்னர், மின்சாரத் துறை அலுவலகத்தில் இயக்குநர் தனலட்சுமி பணத்தைக் கேட்டதை செல்போனில் பதிவு செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமியின் கணவர் கோவிந்தராஜை மிரட்டுவதாகக் கூறப்பட்ட நிலையில் வேலூர் சரக டிஐஜியிடம் மனு அளித்தார்.