கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று (நவ. 25) இரவு அல்லது நாளை காலைக்குள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதி வழியாக நிவர் புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சேண்பாக்கம் மாங்காய் மண்டி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சிப் பணியாளர்கள் தூர்வாரினர். வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், "நிவர் புயல் காரணமாக வாகனங்களை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டவும், பலத்த காற்று அடிக்கும் நேரத்தில் வாகனத்தைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு பிறகு செல்லவும்" என டிஜிட்டலில் அறிவிக்கப்படுகிறது.
வேலூர் வட்டாரப் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ உதவிக்காக மருத்துவர்கள், சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்ணமங்களம், கண்ணியம்பாடி இடையே உள்ள சாலைகளின் பள்ளங்களை செங்கல் வைத்து சீர்செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.