வேலூர்: அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சூரியகலா, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூரியகலாவுக்கு பிற்பகல் 2 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிரசவ வார்டில் இருந்த சூரிய கலாவுக்கும், அவரது பிறந்த குழந்தைக்கும் 40 வயதுமிக்க பெண்மணி ஒருவர் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 19) அந்த பெண் சூரியகலாவிடம் இருந்து குழந்தையை தாருங்கள் வெளியே உள்ள தங்களுடைய உறவினர்களிடம் காட்டி விட்டு வருகிறேன் என்று வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, குழந்தையை வாங்கிச் சென்ற அந்த அடையாளம் தெரியாத பெண் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தையை எடுத்துச் சென்ற பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் அளித்தனர். பின்னர் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு குழந்தை காணாமல் போனது குறித்த புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவை வைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். சிசிடிவி காட்சியில் குழந்தையை கடத்திச் சென்ற அந்த பெண்மணி திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.