வேலூர்:காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று நிதிநிலை அறிக்கை குறித்து பேசினர்.
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கு பேராசிரியர், நாங்கள் எல்லாம் மாணவர்கள். அவர் சொல்வதை நாங்கள் செய்து வருகிறோம். சட்டத்தை படித்து விட்டு சட்டப்பேரவையின் முன்னவராக இருக்கிறார். அவரைப் போல அவை முன்னவராக யாராலும் இருக்க முடியாது. காட்பாடி மக்களுக்காக அவர் நிறைய செய்திருக்கிறார். அவர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளாதீர்கள் மக்களே" என்றார்.
மேலும், "வேலூர் மாநகராட்சியை பொருத்தவரையில் 60 வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் இன்னும் ஓராண்டு காலத்தில் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடித்து தருவேன். இந்த ஆண்டு 97 கோடி ரூபாய் சாலைக்காக தந்திருக்கிறோம். மாநகராட்சிக்கு 328 கோடி ரூபாய் தந்திருக்கிறோம். மேலும் குடிநீர் பிரச்சனை இன்னும் பத்து இருபது நாட்களுக்குள் மே 15ஆம் தேதிக்குள் முழுமையாக முடித்து உடனே பிரச்சனை தீர்க்கப்படும். பாதாள சாக்கடையும் இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "காட்பாடி நகரமாக நன்கு வளர்ச்சி அடைந்து விட்டது. காட்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் அதிக வழக்குகள் வருகிறது. சமாளிக்க முடியவில்லை என டிஎஸ்பி சொன்னார். சட்டப்பேரவையில் துண்டு சீட்டில் எழுதி முதல்வரிடம் காண்பித்தேன். அப்போதே சட்டப்பேரவையில் பிரம்மபுரம் பகுதியில் மேலும் ஒரு காவல் நிலையத்தை அமைக்க அறிவித்தார்.அம்மாவுக்கு ஆயிரம், பொண்ணுக்கு ஆயிரம் கொடுத்தாச்சு. பஸ் விட்டு இருக்கோம். போர் அடிச்சா பஸ் ஏறு ஆற்காடு போ, அங்கு வரும் பஸ்ஸில் மீண்டும் ஏறு குடியாத்தம் போ. யாரு என்ன கேட்கப் போகிறார்கள்" என மகளிர் இலவச பேருந்து திட்டத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "23 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். புதியதாக ஒரு லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்கிறோம். என்னை ஒரு தாசில்தார் சந்தித்தார், நான்தான் முதியோர் உதவித்தொகை கொடுக்கும் தாசில்தார் என்று அறிமுகம் செய்து கொண்டார். நீங்கள் கொடுக்கிற தாசில்தாரா? இல்ல (வாங்குற தாசில்தாரா) என்று கேட்டேன். அதற்கு அவர் கொடுக்கிற தாசில்தார் தான் சார் என்று பதில் சொன்னார்.