தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 11:15 PM IST

ETV Bharat / state

வேலூரில் பரவும் டெங்கு காய்ச்சல் மறைக்கப்படுகிறதா?

வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dengue fever

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, டெங்கு கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. டெங்கு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது. இந்த டெங்கு காய்ச்சல் குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகளவு தாக்குகிறது. இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்காக குழந்தைகள் தனிப் பிரிவில் சிறப்பு வார்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

டெங்கு தடுப்பு நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் அரசுக்கு அவப்பெயர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருப்பதை நேரடியாக ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல், பாதிப்பு ஏற்பட்ட பின் தற்போது மாநகராட்சி சார்பில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்கின்றனர்.அதன்படி டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் திறந்தவெளியில் தண்ணீர் சேமித்து வைத்தால் சம்பந்தப்பட்ட வீடு மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

இந்நிலையில் டெங்கு பாதித்த சிறுவனின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், தங்கள் மகனுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்ததைத் தொடர்ந்து அவனுக்கு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் தொடர்பான அறிக்கை அளிக்கும்படி வேலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநருக்கு, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் யாஷ்மின் இன்று இரவு சென்னை செல்கிறார்.

டெங்கு பாதித்த சிறுவனின் தாய் பேட்டி

இதுகுறித்து இணை இயக்குனர் யாஷ்மினிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். வைரஸ் காய்ச்சலால் பலபேர் தினமும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இதுவரையில் யாருக்கும் டெங்கு இருப்பதாக எனக்கு தகவல் வரவில்லை என்று தெரிவித்தார். டெங்கு பாதிப்பு இருப்பதாக சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களே தெரிவிக்கும் நிலையில் சுகாதாரத்துறை அலுவலர்கள் அதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details