வேலூர்:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னைதேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு (செப். 2) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்லது டெங்கு கொரோனாவைப் போல் ஒழிக்கப்பட வேண்டியது எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்நிலையில், அதனை கண்டித்து வட மாநிலம் மற்றும் புதுச்சேரி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக பாஜகவினரும், இந்து அமைப்புகளும் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அயோத்தி, தபஸ்வி கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, "டெங்கு, மலேரியா போன்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக தலைவரின் மகன் என்ன தைரியத்தில் கூறியிருக்கிறார்?" எனக் கேள்வி எழுப்பி, அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினின் போஸ்டர்களை கிழித்து, தீயை வைத்து எரித்துள்ளார்.