தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 18, 2019, 10:11 PM IST

ETV Bharat / state

அரக்கோணத்தில் சுமூகமாக நடந்துமுடிந்த வாக்குப்பதிவு!

வேலூர்: அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்விசாரம் வாக்குச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது.

அரக்கோணம்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் இன்று மாலை வரை வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பாமக முன்னாள் மத்திய அமைச்சர் வேலு மற்றும் முன்னாள் எம்எல்ஏ இளவழகன் ஆகியோர் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை, நீங்கள் இந்த வழியாக செல்ல வேண்டாம் என எச்சரித்தனர். அதற்கு நாங்கள் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளோம் என பாமக தொண்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவை அனுமதிக்காததை கண்டித்து இந்த பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் தொண்டர்கள வாக்குச்சாவடிக்குள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூட்டத்தை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரித்தும் யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பெரும் பரபரப்பு நீடித்ததையடுத்து கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவழியாக போலீசார் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

அரக்கோணம்

துப்பாக்கிச்சூடு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டதால் கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் அங்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வாக்குப் பதிவு செய்ய அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை வேலூர் சரக டிஐஜி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டனர்.

கூட்டத்தை கலைப்பதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details