தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 11, 2019, 10:42 PM IST

ETV Bharat / state

வாணியம்பாடி அருகே 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு!

வேலூர்: பாலாற்றங்கரையில் கள ஆய்வு மேற்கொண்ட திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்,மாணவர்கள் அம்பலூரில் பிற்காலச் சோழர் காலத்து நடுகல் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

ancient_stone

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன் ஆகியோர் வாணியம்பாடி சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கள ஆய்வுப் பணியினை மேற்கொண்டனர். அப்போது பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அம்பலூரில் நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர்.

அம்பலூரில் கண்டெடுக்ப்பட்ட நடுகல்

இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, “திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் தேடத் தேட எண்ணற்ற தொல்லியல் தடயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் இதுவரை ஆய்விற்கு உட்படுத்தாத புதிய கண்டறிதல்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றோம். அவ்வகையில் கடந்த மூன்று நாட்களாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்டபோது அம்பலூர் எல்லையில் அமைந்துள்ள ‘தேங்காய் தோப்பு வட்டம்’ என்ற பாலாற்றின் கரையில் மண்ணில் புதைந்தவாறு நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம்.

இந்நடுகல் ஆனது பாலாற்றில் இருந்து பிரிந்து வரும் கால்வாயில் கிடக்கிறது. கால்வாயினைத் தூர்வாரும் போது இக்கல் மண்ணில் இருந்து வெளிப்பட்டுள்ளது. இயந்திரத்தினால் தூர்வாருகையில் நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. உடைந்த நிலையில் மண்ணில் புதையுண்டு காணப்பட்ட நடுகல்லை நாங்கள் மீட்டு சுத்தம் செய்து பார்க்கையில், அது சோழர்காலக் கலைப் பாணியில் அமைந்துள்ள நடுகல் என்பதை அறிய முடிந்தது.

நடுகல்லில் வீரனின் வலது கரத்தில் நீண்ட போர் வாளினையும் இடது கரத்தில் தற்காப்புக் கேடயத்தினையும் கம்பீரமாக ஏந்தியுள்ளான். இடது கையில் உள்ள கேடயமானது செவ்வக வடிவில் முப்பரிமாண யுக்தியில் செதுக்கப்பட்டுள்ளது. இது நடுகல்லினைச் செதுக்கிய சிற்பியின் தனித்துவத்தினைக் காட்டுவதாக உள்ளது. வீரனின் இரு கரங்களிலும் பூணினை அணிந்துள்ளான்.

தனது சடாமுடியினை முடிந்து கொண்டை வடித்துள்ளான். காதுகளில் காதணியும், கழுத்தில் சரபளியும் அணிந்தவாறு வீரன் வடிக்கப்பட்டுள்ளான். போரில் எதிரி எய்த வலிமையான அம்பானது வீரனின் வலது தோளில் பாய்ந்து மார்பினைத் துளைத்து வெளிவந்த நிகழ்வை நடுகல்லில் வெளிப்படுத்தியுள்ளனர்.

நடுகல்லின் இடதுபக்க மேல்புறத்தில் இறந்த வீரனை இரண்டு தேவலோகப் பெண்கள் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வது போன்றும் காட்டப்பட்டுள்ளது. முழுமையான இந்நடுகல்லானது ஏறக்குறைய 6 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாக இருக்கக்கூடும். ஆனால் 4 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட வீரனின் வயிற்றுப் பகுதி அளவு மட்டுமே கிடைத்துள்ளது.

எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இக்கல்லில் இல்லை. சிற்பத்தின் அமைப்பினைக் கொண்டு இது பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்காலமான 12ஆம் நூற்றாண்டச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம். இந்த நடுகல்லானது இப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிர் துறந்த வீரனுக்காக எடுக்கப்பட்டதாகும்.

இக்கல்லானது உடைந்த நிலையில் மேல்புறம் மட்டுமே கிடைத்துள்ளது. மற்றொரு பகுதி கிடைக்கவில்லை. கேட்பாரற்றுக் கிடக்கும் இந்நடுகல்லின் வரலாற்றினை அறியாத இப்பகுதி மக்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். பொதுவாக நடுகற்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு அதனை மக்கள் வழிபட்டு வருவது ஒரு காரணமாகும்.

ஆனால், இந்த நடுகல்லினை மக்கள் வழிபடுவதில்லை. இது போன்று பராமரிப்பு இன்றி சிதைவுறும் நிலையில் உள்ள தொல்லியல் சின்னங்களைத் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மீட்டு ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:பரமக்குடி அருகே சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details