வேலூர் கோட்டையினுள் புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயமும், கோட்டையின் அகழி ஆகியவைகளும் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ளது. இதனை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தைக் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
அவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கோயில் சென்றால் முறையாக பூஜைகள் நடைபெறாது, கோயில் விழாக்களும் முறையாக நடத்தபடமாட்டாது என அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகரச் செயலாளர் அப்பு தலைமையில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராம மூர்த்தியிடம் கோயில் தற்போது உள்ள பக்த சபா கட்டுபாட்டில் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மனுவை அளித்து உள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அப்பு, “வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தொல்லியல் துறை இந்த கோயிலை இது நாள் வரை சிறப்பான முறையில் பாதுகாத்து வருகிறார்கள்.
வரும் ஜூன் 25ஆம் தேதி ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலை மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கீழ் கொண்டுவரப்போவதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் தற்சமயம் அறங்காவலர் குழு உறுப்பினருக்கான படிவங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியது.