வேலூர்:பேர்ணாம்பட்டு மலைப்பகுதியில் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் எம்.எஸ். முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் 100 போலீசார் சனிக்கிழமை தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாராயம் காய்ச்ச தயாராக வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் ஊறல் கண்டுபித்த போலீசார் அதை தரையில் ஊற்றி அழித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப்களின் மூலம் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், வேலூர் சரக காவல் துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாஸ்கரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100 போலீஸாரை உள்ளடக்கிய குழு பேர்ணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.