தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் ஆசையால் தம்பதியைக் கொன்ற கல்லூரி மாணவர்கள் கைது - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட ஆசையால் கணவன், மனைவியை கொலைசெய்த இரண்டு கல்லூரி மாணவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

‘பைக் ஆசையால் தம்பதியை கொன்ற கல்லூரி மாணவர்கள் கைது’
‘பைக் ஆசையால் தம்பதியை கொன்ற கல்லூரி மாணவர்கள் கைது’

By

Published : Feb 25, 2020, 6:53 PM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள பெரகம்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (36), இவரது மனைவி லதா (33). இருவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் வீடு கட்டி வசித்துவந்தனர். இந்நிலையில் 2018 ஏப்ரல் 24ஆம் தேதியன்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், கணவன் மனைவி இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் லதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிய ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கே ரமேஷ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிறுகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலைசெய்யப்பட்ட அன்று வீட்டிலிருந்த 7 பவுன் நகை, 3,000 ரூபாய் பணம், ஒரு இருசக்கர வாகனமும் திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு திருடுபோன ரமேஷின் இருசக்கர வாகனம், சிறுகனூர் அருகே வேப்பூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. ஓட்டிவந்த பழனிச்சாமி என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர், பழனிச்சாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பழனிச்சாமியும் அவரது நண்பரான பெரம்பலூர் சத்திரமணி பகுதியைச் சேர்ந்த கிஷாந்த் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் - லதா தம்பதியை பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது.

பைக் ஆசையால் தம்பதியை கொன்ற கல்லூரி மாணவர்கள் கைது

ரமேஷ் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மீது கொண்ட ஆசை காரணமாக இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்றுவந்தனர். இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை வழக்கு விசாரணையை முடித்த சிறுகனூர் காவல் துறையினரை, திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் இன்று பாராட்டி கௌரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details