தமிழ்நாடு

tamil nadu

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்றா?

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞருக்கு சாதாரண வைரல் காய்ச்சல்தான் ஏற்பட்டுள்ளது என்று அரசு மருத்துவமனை முதல்வர் சாரதா தெரிவித்துள்ளார்.

By

Published : Feb 3, 2020, 7:57 AM IST

Published : Feb 3, 2020, 7:57 AM IST

Updated : Mar 17, 2020, 5:35 PM IST

trichy gh dean pressmeet
trichy gh dean pressmeet

சீனாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானப் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்த இளைஞர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி பல்நோக்கு மருத்துவமனை முதல்வர் சாரதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அருண் (27) என்பவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு டிரைவர் பணிக்காகச் சென்றார். இன்னும் சில தினங்களில் அவரது தங்கையின் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக அருண் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். திருச்சியிலிருந்து கார் மூலம் அவர் மதுரை செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் அருணை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சோதனையிட்டபோது அவருக்கு காய்ச்சல் மற்றும் சளிப் பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. இதில் அபாயகரமான அறிகுறி எதுவும் தென்படவில்லை. தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்தான் உள்ளன. அபாயகரமான அறிகுறிகள் எதுவும் இல்லை.

மருத்துவமனை டீன் சாரதா

மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர். சம்பந்தப்பட்ட வைரல் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவுக்குள் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது. அங்கு செல்வோர் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்” என்றார்.

இதனையும் படிங்க: ‘கரோனோ பாதிப்பை பயன்படுத்தி கல்லாக்கட்டும் காரைக்குடி உணவகம்’

Last Updated : Mar 17, 2020, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details